வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலி


வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில்  என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 3 July 2021 8:11 PM GMT (Updated: 3 July 2021 8:11 PM GMT)

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

வாழப்பாடி
என்ஜினீயரிங் மாணவர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அன்புராஜன் (வயது 47). இவர் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் வெற்றிராஜன் (23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். 
தற்போது ஊரடங்கு காரணமாக இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். மேலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
விபத்தில் பலி
இந்தநிலையில் நேற்று வெற்றிராஜன் தனது வீட்டில் இருந்து தம்மம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் சடையன் செட்டியேரி பகுதியில் எதிரே வேகமாக வந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வெற்றிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக மினி வேன் டிரைவரான சிங்கிபுரத்தை சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர்.
10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவரான வெற்றிராஜன், பொறியியல் பட்டம் பெற்ற பின்பு குடிமைப்பணிகள் தேர்வெழுதி, இந்திய ஆட்சிப்பணிக்கு செல்வதை லட்சியமாக கொண்டிருந்தார். தற்போது எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் பலியாகியது, அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story