பணியில் இருந்து நீக்கியதால் தேசிய ஊரக வேலை திட்ட பொறுப்பாளர் தற்கொலை


பணியில் இருந்து நீக்கியதால் தேசிய ஊரக வேலை திட்ட பொறுப்பாளர் தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 8:15 PM GMT (Updated: 3 July 2021 8:15 PM GMT)

திருவேங்கடம் அருகே தேசிய ஊரக வேலை திட்ட பொறுப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவேங்கடம்:
பணியில் இருந்து நீக்கியதால் தேசிய ஊரக வேலைத்திட்ட பொறுப்பாளர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணித்தள பொறுப்பாளர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மருதன்கிணறு மகேந்திரவாடி கீழ தெருவைச் சேர்ந்தவர் ஏசையா மகன் ஜெயராஜ் (வயது 42). இவர் மகேந்திரவாடி பஞ்சாயத்து புதுக்குளத்தில் தேசிய ஊரக வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மேலநீலிதநல்லூர் யூனியன் அதிகாரிகள், ஜெயராஜை பணித்தள பொறுப்பில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த ஜெயராஜ் சம்பவத்தன்று மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்டுள்ளார். பின்னர் அவர் அங்கு திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே, ஜெயராஜின் அண்ணன் அந்தோணிராஜ் உள்ளிட்ட  உறவினர்கள் மற்றும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், அரசியல் கட்சியினர் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று ஜெயராஜ் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் கூறுகையில், ‘ஜெயராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும். அதுவரை ஜெயராஜ் உடலை வாங்க மாட்டோம்’ என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story