கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது


கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 8:18 PM GMT (Updated: 3 July 2021 8:18 PM GMT)

சென்னையில் இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையில் கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வங்காரம் பகுதியில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் கஞ்சா விற்பவர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி, கஞ்சா வேண்டும் என்று வங்காரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 27) என்பவரை தொடர்பு கொண்டனர். அவரிடம் ரூ.500 கொடுத்து கஞ்சாவை போலீசார் வாங்கினர். அப்போது, கையும், களவுமாக பிரகாஷை பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் சித்துடையார் காலனி தெருவை சேர்ந்த பால்ராஜ் (48) என்பவர் தன்னிடம் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து கொடுத்து, விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பால்ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர், சென்னையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து இந்த பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், சித்துடையார் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். மேலும் கஞ்சா வியாபாரி பால்ராஜ் மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகர்ப்பகுதியில் மட்டுமே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இருந்த நிலையில் கிராம பகுதிகளிலும் தற்போது கஞ்சா விற்பனை நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story