மாவட்டத்தில் முன்னேற்பாடு பணி: கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் நாளை முதல் பக்தர்கள் அனுமதி; பூஜை பொருட்கள் கொண்டு செல்ல தடை


மாவட்டத்தில் முன்னேற்பாடு பணி: கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் நாளை முதல் பக்தர்கள் அனுமதி; பூஜை பொருட்கள் கொண்டு செல்ல தடை
x
தினத்தந்தி 3 July 2021 8:56 PM GMT (Updated: 3 July 2021 8:56 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் வழிபட வழியின்றி மூடப்பட்டன.
அதே வேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.

நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

இந்த நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் மற்றும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இந்து கோவில்கள் மற்றும் மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பூஜை பொருட்களுக்கு தடை

திருச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்ய 5-ந் தேதி (நாளை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே வர வேண்டும்.

பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்கப்படும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அபிஷேகத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அமர அனுமதிக்கப் பட மாட்டார்கள். விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story