திருவள்ளூரில் போலி நகைகளை விற்று நூதன முறையில் மோசடி - 4 பேர் கைது


திருவள்ளூரில் போலி நகைகளை விற்று நூதன முறையில் மோசடி - 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 3:52 AM GMT (Updated: 4 July 2021 3:52 AM GMT)

திருவள்ளூரில் போலி நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்தவர் விமல்சந்த் (வயது 62). இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த 30-ந்தேதி விமல்சந்த் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் 8 கிராம் பழைய நகைகளை விற்று அதற்கு பதிலாக 8 கிராம் புதிய தங்க நகைகளை வாங்கிச்சென்றனர். மேலும் கடந்த 1-ந்தேதியன்று மேற்கண்ட 2 பெண்களும் 14 கிராம் எடை கொண்ட பிரேஸ்லெட்டை விற்று விட்டு 14 கிராம் எடை கொண்ட புதிய நகைகளை வாங்கிச்சென்றனர். மேற்கண்ட நகைகளை நேற்று முன்தினம் கடையின் உரிமையாளர் விமல்சந்த் உருக்கி பார்த்தார். அப்போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது.

இதனால் பதறிப்போன அவர் இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகடையில் நூதன முறையில் நகைகளை விற்று மோசடி செய்து தப்பிய பெண்களை பிடிக்க திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பெண்கள் சென்னையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மான்சி (வயது 40) சோனிகுப்தா (30), உடந்தையாக இருந்த கமலேஷ் (40), நிர்மல்குமார் (41) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story