சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது


சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 12:57 PM GMT (Updated: 4 July 2021 12:57 PM GMT)

சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

சாத்தான்குளம்:
 சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்புராயபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி ஜேசுகனி (வயது 36). சுப்புராயபுரம் விலக்கில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கணவர் ராஜேஷ், அப்பகுதியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ம்தேதி ஜேசுகனி கடையில் இருந்தபோது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜேசுகனியிடம் சென்று குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் கொடுத்தபோது மர்ம நபர்கள், ஜேசுகனி அணிந்திருந்த 5பவுன் சங்கலிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்ேபரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் மர்ம நபர்கள் வந்த வாகன பதிவு எண் மூலம் நடந்த விசாரணையில் நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகாபிரபு (23) மற்றும் அவரது கூட்டாளி செல்வன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பத்தமடையா சேர்ந்த மகாபிரபுவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story