வேலூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்


வேலூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 July 2021 1:02 PM GMT (Updated: 4 July 2021 1:02 PM GMT)

வேலூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்

வேலூர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனையும், அங்குள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் சில்லரை மீன் விற்பனையும் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி அங்கு இயங்கிய சில்லரை மீன் விற்பனை கடைகள் மீண்டும் மீன் மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று வேலூர் மீன்மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதனால் அங்குள்ள சில்லரை விற்பனை கடைகளில் மீன்கள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது. இதேபோன்று அங்குள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன், இறைச்சி வாங்க மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்து நின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது. 

பொதுமக்களில் சிலரும், மீன்கடையில் பணிபுரியும் ஊழியர்களில் சிலரும் முககவசம் அணியவில்லை. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் மீன்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Next Story