மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சம் குவிண்டால் ரூ.7,236-க்கு விலைபோனது


மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சம் குவிண்டால் ரூ.7,236-க்கு விலைபோனது
x
தினத்தந்தி 4 July 2021 3:42 PM GMT (Updated: 4 July 2021 3:42 PM GMT)

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ரூ.7,236-க்கு விலை போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பருத்தி விவசாயிகளால் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் நடத்தப்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய ஊர்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாரந்தோறும் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சனிக்கிழமை அன்றும், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கட்கிழமை அன்றும், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை அன்றும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி ஏலம் விடப்பட்டது. இதில் கோவை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் நேரில் வந்து ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். மயிலாடுதுறையில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,236-க்கு ஏலம் போனது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வாரத்தில் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,700 குவிண்டால் பருத்தியை டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் கொள்முதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story