ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதால் ராணிப்பேட்டையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்


ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதால் ராணிப்பேட்டையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 4 July 2021 4:27 PM GMT (Updated: 4 July 2021 4:27 PM GMT)

ராணிப்பேட்டையில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதால், சோதனை அடிப்படையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை-

போக்குவரத்து மாற்றம்

ராணிப்பேட்டையில் உள்ள எம்.பி.டி. சாலையில், முத்துக்கடை பகுதிக்கும், காரை கூட்ரோடு பகுதிக்கும் நடுவில் உள்ள பழைய ெரயில்வே மேம்பாலம் அகற்றப்பட்டு, சுமார் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. இப்பணி முடிவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க இருப்பதால்  ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், ராணிப்பேட்டையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை மார்கத்திலிருந்து, ராணிப்பேட்டை முத்துக்கடை வழியாக சிப்காட், திருவலம், சித்தூர் பகுதிகளுக்கு எம்.பி.டி. சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும், முத்துகடையிலிருந்து இடது புறம் கிருஷ்ணகிரி சாலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதற்காக முத்துக்கடை பகுதியில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு திருப்பி விடப்படும் வாகனங்கள் கிருஷ்ணகிரி சாலையில் இருந்து, ராணிப்பேட்டை ெரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக, எல்.எப்.சி. பள்ளி, ஸ்கடர் மருத்துவமனை, காரை கூட்ரோடு சென்று, சிப்காட் வழியாக செல்லும், எம்.பி.டி. சாலைக்கு திருப்பி விடப்படுகின்றன.

சித்தூர் மார்க்கம்

இதேபோல் சித்தூர் மார்க்கத்திலிருந்து சிப்காட் வழியாக எம்.பி.டி. சாலையில் ராணிப்பேட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களும், பொன்னை மார்க்கத்திலிருந்து, லாலாபேட்டை, அக்ராவரம் வழியாக ராணிப்பேட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களும், ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையிலுள்ள காரை கூட் ரோடு பகுதியில், தடுப்பு அமைக்கப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஸ்கடர் மருத்துவமனை, எல்.எப்.சி. பள்ளி, ெரயில்வே ஸ்டேஷன் சாலை, எம்.எப்.சாலை. வழியாக நவல்பூர் எம்.பி.டி சாலைக்கு சென்று, பின்னர் முத்துக்கடைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக, வாகனங்கள் திருப்பி விடப்படும் இடத்தில் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்கள் செல்ல வேண்டிய திசை குறித்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் போலீசாரும் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story