பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 6:16 AM GMT (Updated: 9 July 2021 6:16 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ் கட்சி மற்றும் மீஞ்சூர் பொன்னேரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கையெழுத்து இயக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார்.

மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் சதாசிவலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் பிரகாசம், வட்டார தலைவர்கள் ஜெலந்தர், சந்திரசேகர், பொன்னேரி நகரத்தலைவர் கார்த்திகேயன், மீஞ்சூர் நகர தலைவர் துரைவேல்பாண்டியன், முனிகண்ணையா, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி தாமோதரன், பொன்ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

பூந்தமல்லி

பூந்தமல்லி நகர மற்றும் வட்டார தெற்கு, வடக்கு, மத்திய காங்கிரஸ் கட்சி சார்பாக பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளருமான அருள் அன்பரசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்தபடி தள்ளிகொண்டு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த அவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கும், கியாஸ் சிலிண்டர்களுக்கும் மாலை அணிவித்தபடி மாட்டு வண்டியில் வந்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் வக்கீல் சம்பத் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜோதி சுதாகர், நிர்வாகிகள் சத்ய மோகன், செல்வராஜ், பிரேம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை குறைத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

எல்லாபுரம்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சிதலைவர் மூர்த்தி தலைமையில் 45-க்கும் மேற்பட்டோர் பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின்னர் ஊர்வலமாக பெரியபாளையம் பாரத் பெட்ரோல் நிலையம் அருகே சென்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர்கள் லோகநாதன், சத்யநாராயணன், மாவட்ட செயலாளர் சிவன்ஆச்சாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story