பழனி கோவிலுக்கு வந்த கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்


பழனி கோவிலுக்கு வந்த கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 12 July 2021 2:50 PM GMT (Updated: 12 July 2021 2:50 PM GMT)

பழனி கோவிலுக்கு வந்த கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பழனி முருகன் கோவிலுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கேரள பெண்ணின் கணவனை அடித்து துரத்தி விட்டு, அங்குள்ள விடுதிக்கு கடத்திச்சென்று இந்த கொடுமையை அந்த கும்பல் செய்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண் கேரளத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டி.ஜி.பி.க்கு கேரள டி.ஜி.பி. கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக்கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story