விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தாசில்தாருக்கு அடி-உதை


விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தாசில்தாருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 13 July 2021 9:33 PM GMT (Updated: 13 July 2021 9:33 PM GMT)

சிக்கோடியில், அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொதுமக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர்.

பெங்களூரு: சிக்கோடியில், அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொதுமக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர்.

விதவை பெண்

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டி.எஸ்.ஜெயதார். 2-ம் நிலை தாசில்தாரான அவரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர விதவை உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அவர், உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தனது மகனுடன் அந்த விதவை பெண் நேற்று சிக்கோடிக்கு வந்து தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை நேரில் சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றார்.

உரிய விசாரணை

உடனே தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், அந்த விதவை பெண்ணிடம் ஆபாசமான முறையில் பேசினார். அத்துடன் நிற்காமல் அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஒருபடி மேலே போய், தனது பேண்டை கழற்றி மர்ம உறுப்பை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விதவை பெண் செய்வதறியமால் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அவர் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறினார். 

இதை கேட்டுக் கொண்ட அவரது மகன் அந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசி போராட்டம் நடத்தினார். அந்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த விதவை பெண்ணும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். 

இதில் தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த விதவை பெண் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. இதை அறிந்த இன்னொரு தாசில்தார் பிரிதம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரித்தார். இதை கேட்டுக் கொண்ட அந்த தாசில்தார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தகாத முறையில்...

தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், இவ்வாறு பெண்களிடம் அருவெறுப்பாக நடந்து கொள்வது புதிது அல்ல. அவர் ஏற்கனவே தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியரிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்டதாக அங்கு இருந்தவர்கள் கூறினர்.

Next Story