ஆட்டோ டிரைவர் தற்கொலை: போலீஸ் ஏட்டு பணிஇடைநீக்கம்


ஆட்டோ டிரைவர் தற்கொலை: போலீஸ் ஏட்டு பணிஇடைநீக்கம்
x
தினத்தந்தி 14 July 2021 10:52 AM GMT (Updated: 14 July 2021 10:52 AM GMT)

ஆட்டோ டிரைவர் தற்கொலை: போலீஸ் ஏட்டு பணிஇடைநீக்கம்.

ஆவடி,

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 34). ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான பிரதீப் (30) என்பவருடன் நேற்று முன்தினம் ஜமுனா நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சந்தோஷ் என்பவர் அங்கு வந்து அவர்களிடம் செல்போனை வாங்கி கொண்டு விசாரணைக்காக போலீஸ் நிலையம் வருமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாக்யராஜ் அவரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த போலீஸ்காரர் சந்தோஷ், பாக்கியராஜின் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது பறித்த செல்போனை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி கீழே கிடந்த மதுபாட்டில் துண்டால் பாக்யராஜ் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதையடுத்து படுகாயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில், அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோர் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி போலீஸ் ஏட்டு சந்தோசை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story