பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2021 4:33 PM GMT (Updated: 16 July 2021 4:33 PM GMT)

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் மாட்டு வண்டியில் காரை ஏற்றி ஊர்வலமாக வந்தனர்.

விழுப்புரம், 

பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் விழுப்புரத்தில் நேற்று காலை போராட்டம் நடந்தது. இதையொட்டி ஒரு பாடையை கட்டி அதில் சமையல் கியாஸ் சிலிண்டரை வைத்தும், மாட்டு வண்டியில் கார் ஒன்றை ஏற்றியும் இருந்தனர்.
பின்னர் விழுப்புரம் தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் சுமந்தபடி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துடன் காரை ஏற்றிய அந்த மாட்டு வண்டியை ஒருவரும் ஓட்டிக்கொண்டு வந்தார்.

ஆர்ப்பாட்டம்

இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முடிவடைந்தது. தொடர்ந்து, அங்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மின்னல்தினேஷ், மாநில அமைப்புக்குழு நிர்வாகிகள் சசிக்குமார், சேட்டு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அலெக்ஸ்தீனா, மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்அலி, டேவிட், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, ஏழுமலை, சக்கரபாணி, ஜெகதீசன், ஜீவா, வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டு பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். முடிவில் விழுப்புரம் நகர செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

Next Story