பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு


பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 19 July 2021 6:49 PM GMT (Updated: 19 July 2021 6:49 PM GMT)

பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்
பூசாரிகள் பேரமைப்பு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பூசாரிகள் பேரமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் வழியாக மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
ஒருகால பூஜை திட்டத்தில் பயன்பெறும் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கியமைக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். கிராமம் மற்றும் நகர் பகுதியில் பூஜை செய்துவரும் அரசின் ஒரு கால பூஜை திட்டத்தில் பயன் அடையாத பூசாரிகள் பல ஆயிரக்கணக்கானோர் தற்போது உள்ள அரசாணைப்படி கொரோனா நிவாரண நிதி பயன் பெறமுடியாது என்பதை தாங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம். பூஜை சேவைப்பணியாற்றி வரும் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வயோதிகம் வறுமையில் வாடும் பூசாரிகளுக்கு அரசின் பூசாரிகள் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை எளிமைபடுத்தியும் பயன்பெறும் பூசாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 
மின்சார கட்டணம் ரத்து
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 2சி (1) மின்சார கட்டண விகிதத்தை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பூசாரிகள் நலவாரியம் நடைமுறைப்படுத்தாமல் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சார்பில் அந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட கிராம கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் மற்றும் நெய்வேத்தியத்திற்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்கிறோம். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுமனை
இதேபோல் மேலப்பாளையம் பொதுமக்கள் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில்,  அமராவதி ஆற்று கரையோர பகுதியில் எங்களது வீடுகள் உள்ளதால் 1977-ல் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தபோது மேட்டுப்பாங்கான இடத்தில் நாங்கள் அனைவரும் இடம் பெயர்ந்தோம். அரசு நாங்கள் குடியிருக்க இலவச பட்டா நிலம் கொடுத்தது. ஆனால் மனையாக பிரித்து கொடுக்கவில்லை. இதுசம்பந்தமாக மனுக்கள் பல கொடுத்தும், இதுநாள் வரை பலன் கிடைக்கவில்லை. 
இதனால் நாங்கள் எங்கள் இடத்தில் நிம்மதியாக குடியிருந்து வர இயலாமல் மனக்கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு அரசு கொடுத்த பட்டாபடி வீட்டுமனையை பிரித்து பயனாளிகளாகிய எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். என அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க தடை
கரூர் ராமேஷ்வரப்பட்டியை சேர்ந்த ரஷ்னா என்ற மாணவி கொடுத்த மனுவில், அசுத்தமான தண்ணீரை தூய்மையான தண்ணீராக மாற்றுவதில் மீன்கள் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் மீன் இனம் முழுவதும் அழிவதை தடுப்பதற்காகவும் கடலில் மீன்பிடிக்க தடை உள்ளது. அதுபோல் ஆறு, குட்டை, வாய்க்கால்களில் வருடத்தில் 4 மாதம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story