திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு


திருவல்லிக்கேணியில் கியாஸ் கசிந்த விபத்தில் உடல் கருகிய தாய்-மகன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 19 July 2021 11:10 PM GMT (Updated: 19 July 2021 11:10 PM GMT)

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், படுகாயம் அடைந்த தாய்-மகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 58). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாத்திமா பேகம் (52) என்ற மனைவியும், நஹீத் (22) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி திடீரென அப்துல் ரஹீம் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது, வீட்டில் இருந்த 3 பேர் மீதும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்துல் ரஹீம் மற்றும் அவரது குடும்பத்தினரை தீயணைப்பு படையினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயம் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

இருவர் உயிரிழப்பு

அங்கு அப்துல் ரஹீம் 80 சதவீதமும், அவரது மனைவி பாத்திமா பேகம் மற்றும் மகன் நஹீத் ஆகியோர் 70 சதவீத தீக்காயத்துடனும் உடல் கருகிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பாத்திமா பேகம் மற்றும் அவரது மகன் நஹீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்துல் ரஹீம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.

Next Story