குர்பானி கொடுக்க தயார் நிலையில் ஆடுகள்


குர்பானி கொடுக்க தயார் நிலையில் ஆடுகள்
x
தினத்தந்தி 20 July 2021 8:37 PM GMT (Updated: 20 July 2021 8:37 PM GMT)

பக்ரீத் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குர்பானி கொடுக்க ஆடுகள் தயாராக உள்ளன.

தஞ்சாவூர்;
பக்ரீத் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குர்பானி கொடுக்க ஆடுகள் தயாராக உள்ளன.
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை ஈகை திருநாள் என்றும் கூறுவார்கள். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக இஸ்லாமியர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தியாக திருநாளான இன்றைக்கு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்துவதோடு, இந்த நாளில் புத்தாடை அணிந்து, தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி செய்வது வழக்கம். ஏழைகளும் இறைச்சி உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி இஸ்லாமியர்கள் இறைச்சி தானம் செய்வார்கள்.
வசதிகளுக்கு ஏற்ப
ஆடு, மாடுகளை பலி கொடுத்து 3 சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கை உறவினர்கள், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு 3-வது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள். தங்களது வசதிகளுக்கு ஏற்ப 1 ஆடு, 2 ஆடுகளை இஸ்லாமியர்கள் வெட்டி, ஏழைகளுக்கு வழங்குவார்கள்.
குர்பானி கொடுப்பதற்காக தஞ்சை மாநகரில் வசித்து வரும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை விலைக்கு வாங்கி, வளர்த்து வருகின்றனர். சிலர், ஆடுகளை சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி வந்து இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் விற்பனை செய்தனர். இதற்காக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

Next Story