பெங்களூரு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை சாவு


பெங்களூரு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை சாவு
x
தினத்தந்தி 20 July 2021 8:58 PM GMT (Updated: 20 July 2021 8:58 PM GMT)

பெங்களூரு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று தருவதாக கலெக்டர் உறுதி அளித்து உள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று தருவதாக கலெக்டர் உறுதி அளித்து உள்ளார்.

வீட்டின் மீது விழுந்த சுற்றுச்சுவர்

துமகூருவை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 22). இவரது தங்கை காவ்யா (19). இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா பின்னமங்களா கிராமத்தில் அனுமந்தராயப்பா என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் தங்கினர். அங்கு தங்கி வேணுகோபால் வேலைக்கும், காவ்யா கல்லூரிக்கும் சென்று வந்தனர்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முன்தினம் நெலமங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த வேணுகோபால், கவிதா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி சாவு

இந்த சந்தர்ப்பத்தில் பின்னமங்களா பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையின் போது வேணுகோபால், காவ்யா வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணப்பா என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து வேணுகோபால், காவ்யா வசித்து வந்த வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்த வீடும் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டிற்குள் இருந்த வேணுகோபால், காவ்யா இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்ததும் நெலமங்களா டவுன் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 2 பேரின் உடல்களையும் தான் மீட்க முடிந்தது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இதனை தொடர்ந்து அண்ணன்-தங்கையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெலமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கிருஷ்ணப்பாவை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டர் ரவீந்திரா, பின்னமங்களா கிராமத்திற்கு சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் இறந்த அண்ணன்-தங்கையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அரசிடம் பேசி ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

Next Story