விருதுநகர் சிக்கரி ஆலையில் பயங்கர தீ


விருதுநகர் சிக்கரி ஆலையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 21 July 2021 8:06 PM GMT (Updated: 21 July 2021 8:06 PM GMT)

விருதுநகர் சிக்கரி ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 6 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் சிக்கரி ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 6 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது.
 தீ விபத்து 
விருதுநகர் ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 34). இவருக்கு சொந்தமான சிக்கரி ஆலை இந்நகர் ரோசல்பட்டி சாலையில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியதால் உடனடியாக விருதுநகர், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 
6 மணி நேர போராட்டம்  
இந்த ஆலையில் 200 டன் சிக்கரி கிழங்கு மற்றும் பவுடர் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென கட்டுக்கடங்காமல் பரவியது. இதனால் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
 கோட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன், உதவி அதிகாரி மணிகண்டன், தீயணைப்பு நிலைய அதிகாரி கண்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கு கடுமையாக போராடினர். 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இதற்குள் ஆலை பெருமளவு சேதம் அடைந்தது. அதே நேரத்தில் ஆலையையொட்டி குடியிருப்பு பகுதிகள் இருந்த நிலையில் தீயணைப்பு துறையினரின் தீவிர நடவடிக்கையால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.  சேத மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story