கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்


கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2021 5:16 PM GMT (Updated: 22 July 2021 5:16 PM GMT)

கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது தீவிரமாக நடைபெறு வருகிறது.

பர்கூர், 

கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் வரையிலான 180 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.66) 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாற்றத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து குண்டும், குழியும் புழுதியாக காணப்பட்ட இந்த சாலையில் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுடன் சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரி முதல் சிங்காரப்பேட்டை வரை உள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைத்தும், மழைக்காலங்களில் மீண்டும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் இந்த சாலையை 11 ஆண்டுகளாக புறக்கணித்து மாற்றுச்சாலையில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாலை விரிவாக்க பணிகள் 2 ஆக பிரித்து மேற்கொள்ள வேண்டும் என செல்லகுமார் எம்.பி. கோரிக்கை வைத்தார். அதன்படி பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலை விரிவாக்கம் செய்து, சாலை அமைக்கும் பணிகள் தொய்வின்றி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். இதன் மூலம் 11 ஆண்டுகளாக அவதியுற்று வரும் வாகன ஓட்டிகளும், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்றனர்.

Next Story