நீரில் மூழ்கி மாணவர் பலி
காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி மாணவர் பலியானாா்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி மகன் முகம்மது மிசாரி(வயது 17). இவர் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் முகம்மது மிசாரி தனது நண்பர்களுடன் நேற்று மதியம் வீராணம் ஏரி தலைப்பு அருகே உள்ள உருத்திர சோலை ஜீரோ பாயிண்ட் மதகில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது முகம்மது மிசாரி திடீரென நீரில் மூழ்கினார். இதைபார்த்த அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து முகம்மது மிசாரியை தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் முகம்மது மிசாரியின் உடலை பிணமாக மீட்டனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story