வால்பாறை நெடுங்குன்றம் மலைவாழ் கிராமத்தில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


வால்பாறை நெடுங்குன்றம் மலைவாழ் கிராமத்தில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 July 2021 5:23 PM GMT (Updated: 22 July 2021 5:23 PM GMT)

வால்பாறை நெடுங்குன்றம் மலைவாழ் கிராமத்தில் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சான்றிதழ் வழங்கினார்கள்.

வால்பாறை

வால்பாறை நெடுங்குன்றம் மலைவாழ் கிராமத்தில் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சான்றிதழ் வழங்கினார்கள். 

தீவிர நடவடிக்கை 

கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தாசில்தார் ராஜா தலைமையில், நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார், வட்டார மருத்துவ அதிகாரி பாபுலட்சுமண், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலைவாழ் கிராம மக்கள்  

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வால்பாறை பகுதியில் இதுவரை 14 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

மேலும் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள மலைவாழ் கிராம மக்களுக்கு வனத்துறையினரின் உதவியோடு தடுப்பூசி போடும் பணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினர் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். 

100 சதவீதம் தடுப்பூசி 

இதற்கிடையே வால்பாறை அருகே உள்ள நெடுங்குன்றம் என்ற மலைவாழ் கிராமத்தில் 50 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங் களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 110 பேர் உள்ளனர். 

அவர் களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவக்குழு வினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அனைவருமே தடுப்பூசி போட முன்வந்தனர். 

இதை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அந்த மலைவாழ் கிராமத்தை சேர்ந்த 110 பேருக்கும் முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டனர். இது 100 சதவீதம் ஆகும். 

இது குறித்து மருத்துவக்குழுவினர் கூறியதாவது:- 

சான்றிதழ் வழங்கப்பட்டது 

வால்பாறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களில் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் முதன்முதலாக 100 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

அவர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி பாபுலட்சுமண் தலைமையில் மருத்துவக்குழுவினர் அந்த கிராமத்துக்கே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வழங்கினார்கள். 

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் 2-வது தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடிய காலஅவகாசம் வரும்போது அவர்களுக்கு செலுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story