விஷ வண்டு தாக்கி தொழிலாளி சாவு


விஷ வண்டு தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 July 2021 8:42 PM GMT (Updated: 22 July 2021 8:42 PM GMT)

தாழக்குடி அருகே தென்னை மரம் ஏறும் போது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி:
தாழக்குடி அருகே தென்னை மரம் ஏறும் போது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.  
விஷ வண்டுகள் தாக்கியது
தாழக்குடி அருகே கனகமூலம் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 52), மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜா, வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறினார். அந்த  மரத்தில் சில விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இதனை அறியாத ராஜா, மரத்தில் தேங்காய்களை பறித்து கொண்டு இருந்தார். 
அப்போது எதிர்பாராத விதமாக விஷ வண்டுகள் கூட்டமாக ராஜாவை சுற்றி வளைத்து கடுமையாக கொட்டியது. இதில் உடம்பு முழுவதும் அவருக்கு காயம் ஏற்பட்டது. 
சாவு
இதனால் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டபடி, மரத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று ராஜாவின் உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷவண்டு தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story