ரூ.2 கோடி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு


ரூ.2 கோடி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2021 11:03 AM GMT (Updated: 24 July 2021 11:03 AM GMT)

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் நடந்து வரும் ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் நடந்து வரும் ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீடுகள் கட்டும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 

அந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், மருத்துவம்பாடி கிராமத்துக்கு வந்தார். 

அங்கு, ஜே.ஜே. திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கூடுதல் கலெக்டர், அங்கிருந்து புறப்பட்டு தச்சாம்பாடி கிராமத்துக்கு வந்தார். அங்கு, பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில்  வீடுகள் கட்டும் பணி 2019-2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் 25 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 

அந்தப் பணியை கூடுதல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணியை விரைவில் முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தனிநபர் கழிவறை

மண்டகொளத்தூர் கிராமத்துக்கு வந்த கூடுதல் கலெக்டர், அங்கு தனிநபர் கழிவறை, 30 வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளதைப் 
பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

அந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 

செமியமங்கலம் கிராமத்துக்குச் சென்ற கூடுதல் கலெக்டர், அங்கு இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் 18 வீடுகள் ரூ.3 லட்சம் வீதம் ரூ.54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதைப் பார்வையிட்டார்.

பின்னர் சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த கூடுதல் கலெக்டர் பிரதாப், அங்கு நடந்த ஊராட்சி மன்ற செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று, அரசின் திட்டப்பணிகளை பற்றிய விவரங்களை கேட்டு, ஊராட்சியில் நடக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்துச் செயலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

Next Story