வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தம்பிக்கு வைத்த குறியில் அண்ணன் கொல்லப்பட்டார்


வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தம்பிக்கு வைத்த குறியில் அண்ணன் கொல்லப்பட்டார்
x
தினத்தந்தி 26 July 2021 3:52 AM GMT (Updated: 26 July 2021 3:52 AM GMT)

காஞ்சீபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.

சென்னை,

காஞ்சீபுரம் நகர் பல்லவமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கு உடன் பிறந்தவர்கள் 11 பேர். செந்தில்குமாரின் தம்பியான ரகு மீது 2 கொலை வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது தந்தையின் ஈமச்சடங்கு நடத்துவதற்காக குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர்கள் 7-க்கும் மேற்பட்டோர் வீட்டின் பின்புறமாக குதித்து வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசினர். அந்த கும்பல் செந்தில் குமாரின் தம்பியான ரவுடி ரகுவை தாக்க முயன்ற போது அங்கிருந்து அவர் தப்பிச் சென்று விட்டார்.

தம்பியை காப்பற்ற வந்த அண்ணன் செந்தில்குமாரை மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீட்டில் இருந்த செந்தில்குமாரின் மனைவி சசிகலா (38), தங்கை கோடீஸ்வரி (38) மற்றும் விஜி என்ற விக்னேசுவரன் (24) ஆகியோரையும் அவர்கள் அரிவாள் மற்றும் உருட்டுகட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் போலீசாருடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

பழிக்குப்பழியாக

கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் தம்பி ரகு மீது பல குற்ற வழக்குகள் இருந்து வருவதால் அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக ரகுவை கொல்ல வந்தவர்கள் அண்ணன் செந்தில்குமாரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story