கம்பைநல்லூர் அருகே 4 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து சாவு


கம்பைநல்லூர் அருகே 4 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 26 July 2021 4:53 PM GMT (Updated: 26 July 2021 4:53 PM GMT)

கம்பைநல்லூர் அருகே 4 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே 4 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.
கிணற்றில் விழுந்த குழந்தை
கம்பைநல்லூர் அருகே உள்ள பெரியமாவடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகள் யோசிகா (வயது 4). இந்த குழந்தை அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றது.
அப்போது அங்குள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் குழந்தை தவறி விழுந்து விட்டது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் அவர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
தண்ணீரில் மூழ்கி சாவு
அதன்பேரில் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி குழந்தையை தேடினர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் தேடும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு குழந்தையை அவர்கள் தேடினர். 
அப்போது குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் குழந்தையின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story