ராசிபுரத்தில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ராசிபுரத்தில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 July 2021 10:37 PM GMT (Updated: 26 July 2021 10:38 PM GMT)

ராசிபுரத்தில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது. பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. 
இந்த ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மின்னக்கல், வாய்க்கால் பட்டறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். 
நேற்று நடந்த ஏலத்திற்கு 2,480 சுரபி ரக பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 999 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 09-க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதே சமயத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story