திண்டிவனத்தில் காரில் தூங்கியவர்களிடம் பணம், செல்போன் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனத்தில்  காரில் தூங்கியவர்களிடம் பணம், செல்போன் திருட்டு  மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 July 2021 4:37 PM GMT (Updated: 27 July 2021 4:37 PM GMT)

திண்டிவனத்தில் காரில் தூங்கியவர்களிடம் பணம், செல்போனை திருடிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாராவிளை கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை மகன் அமர்நாத் (வயது 41). இவர் தனது நண்பர் முத்து என்பவருடன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மீண்டும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி சந்திப்பில் அவர்கள் வந்த போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர், அவர்கள் காரில் தூங்கியுள்ளனர்.

பணம்-செல்போன்கள் திருட்டு

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, காரில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், 2 பேரின் செல்போன்களை காணவில்லை. அதாவது, இருவரும் அசந்து தூங்கிய நேரத்தில், அங்கு  வந்த மர்ம மனிதர்கள் காரின் கதவை திறந்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து, அமர்நாத், ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story