பிரிந்து வாழ்ந்த கணவன் சாவு: மனவேதனையில் மனைவி தற்கொலை


பிரிந்து வாழ்ந்த கணவன் சாவு: மனவேதனையில் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 27 July 2021 5:13 PM GMT (Updated: 27 July 2021 5:21 PM GMT)

மத்தூர் அருகே பிரிந்து வாழ்ந்த கணவன் தற்கொலை செய்து கொண்டதால், மனவேதனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கோட்டை வீதியை சேர்ந்தவர் ஏகநாதன். இவருடைய மகள் நிர்மலா (வயது 24). இவருக்கும், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. 

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் நிர்மலா தனது பெற்றோர் வீட்டிலும், முனிரத்தினம் கோவையிலும் வசித்து வந்தனர். மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் மனமுடைந்த முனிரத்தினம் கடந்த 22 நாட்களுக்கு முன்பு கோவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிர்மலாவிற்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தனது கணவர் இறந்த தகவலை அறிந்த நிர்மலா மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story