வாலிபரின் கண் அருகே இருந்த இரும்பு துகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


வாலிபரின் கண் அருகே இருந்த இரும்பு துகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 27 July 2021 6:03 PM GMT (Updated: 27 July 2021 6:03 PM GMT)

வாலிபரின் கண் அருகே இருந்த இரும்பு துகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை, ஜூலை.28-
வாலிபரின் கண் அருகே இருந்த இரும்பு துகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
இரும்பு துகள்
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கும்முப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது36). இவர் தனக்கு நீண்ட நாளாக தலைவலி உள்ளதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை பெற வேண்டி புற நோயாளியாக வந்தார்.
 காது, மூக்கு தொண்டை பரிசோதனையில் எந்தவித நோயும் இருப்பதாக அறிகுறிகள் இல்லை. எனவே சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் வலது கண்ணும், மூக்கும் சேரும் இடத்தில் இரும்பு துகள் இருந்தது தெரியவந்தது. பின்பு தனக்கு மலேசியாவில் வேலை பார்க்கும் போது 2017-ம் ஆண்டில் கியர்பாக்ஸ் தெரித்து சில இரும்பு துகள்கள் வலது கண்ணின் வெளிபாகத்தில் புதைந்தது என்றும், அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் அப்போது சி.டி.ஸ்கேன் எடுக்கவில்லை எனவும் மருத்துவர்களிடம் கூறினார். பின்னர் ஒரு வருட காலமாக தலைவலியுடன் மலேசியாவில் சிகிச்சை பெற்றதாகவும், பின்பு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊர் வந்ததாகவும், மேலும் தலைவலிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனை வந்ததாகவும் கூறினார்.
அறுவை சிகிச்சை
இதைத்தொடர்ந்து முருகேசனுக்கு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப்பிரிவில் டாக்டர் ராஜா கணேஷ் தலைமையில் டாக்டர்கள் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன்குமார் அடங்கிய அறுவை சிகிச்சை குழு, டாக்டர்கள் செந்தில்குமார், கணேசன், மதிநிறைசெல்வி அடங்கிய மயக்குனர் குழு முழு மயக்கம் கொடுத்து மூக்கு வழியாக எண்டோஸ்கோப்பி மூலம் கண்ணுக்குள் உள்ள கொழுப்பில் புதைந்திருந்த இரும்பு துகளை நவீன சிகிச்சை கருவிகள் மூலம் பார்வைக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் 4 மணி நேரம் போராடி துல்லியமாக எடுத்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு கண் பரிசோதனை செய்யப்பட்டதில் பார்வை நன்றாக இருந்தது. தலைவலியும் குணமாகியது. இதற்கு முருகேசன் மருத்துவக் குழுவிற்கும், மருத்துவமனைக்கும், தமிழக அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
பாராட்டு
இது குறித்து மருத்துமனை முதல்வர் பூவதி கூறுகையில், ``இத்தகைய அரிய அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகும். இதை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இலவசமாக செய்யப்பட்டுள்ளது'' என்றார். இந்த அரிய அறுவை சிகிச்சையை செய்த டாக்டர்கள் குழுவை முதல்வர் பூவதி பாராட்டினார்.

Next Story