19 கவுன்சிலர்கள் வெளிநடப்பு


19 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 27 July 2021 7:12 PM GMT (Updated: 27 July 2021 7:12 PM GMT)

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்ற நிலையில் வார்டுகளில் அடிப்படை பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்ற நிலையில் வார்டுகளில் அடிப்படை பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
யூனியன் கூட்டம்
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் 22 கவுன் சிலர்கள் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் 97 தீர்மானங்கள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 
இதனை தொடர்ந்து 18-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் மாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் கடந்த கூட்டத்திலேயே இதை ஆட்சேபித்து நாங்கள் தீர்மானங்களை நிராகரித்தோம். தற்போதும் 97 தீர்மானங்கள் கொண்டு வந்த போதிலும் வார்டுகளில் அடிப்படை வசதிக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்தார்.
வெளிநடப்பு 
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர் வெளிநடப்பு செய்தனர். தலைவர், துணைத்தலைவர் உள்பட5 பேர் தீர்மானங்களை ஆதரித்து கையெழுத்திட்டனர். 
இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. உறுப்பினர் செந்நெல்குடி மாரியப்பன் தெரிவித்ததாவது:-
உள்ளாட்சித்தேர்தல் முடிந்த பின்பு ஏற்கனவே இருந்த நிதியை கொண்டு சில பணிகளை செய்தோம். ஆனால் அதன் பின்பு 2 ஆண்டுகள் முடிவடைய கூடிய நிலையிலும் இதுவரை எங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்ய எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
அடிப்படை வசதி 
 ஒவ்வொரு முறையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் மொத்த நிதியையும் கொடுத்து விட்டு கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அடிப்படை வசதிகளை செய்ய எந்த நிதி ஒதுக்கீடும் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். 
 மக்களுக்கான திட்ட பணிகளை செய்யவேண்டிய யூனியன் நிர்வாகம் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் தொடர்ந்து கூட்டம் நடைபெறாமல் முடங்குவது தேர்ந்தெடுத்த மக்களுக்கு பலன் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும். 

Next Story