மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 27 July 2021 7:20 PM GMT (Updated: 27 July 2021 7:20 PM GMT)

முன்னீர்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிக்கேல் சாமி. இவருடைய மனைவி விக்டோரியா (வயது 50). இவர் தனது சகோதரர் சூசை மாணிக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை சூசை மாணிக்கம் ஓட்டினார். முன்னீர்பள்ளம் அருகே தருவை - திடியூர் பிரிவு ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அங்கு இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது பின்னால் இருந்த விக்டோரியா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விக்டோரியா நேற்று உயிர் இழந்தார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story