பெங்களூருவில் ரூ.1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்


பெங்களூருவில் ரூ.1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 July 2021 8:28 PM GMT (Updated: 27 July 2021 8:28 PM GMT)

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:
  
ரூ.55 லட்சம் மதிப்பு

  பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பஞ்சாரா லே-அவுட், 2-வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தார்கள். அவர்களில் ஒருவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்று தெரிந்தது.

  மற்ற 4 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் 5 பேரும் குறைந்த விலைக்கு போதைப்பொருட்கள், போதை மாத்திரைகளை வாங்கி, அவற்றை கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. கைதான 5 பேரிடம் இருந்து போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.55 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

  இதுபோல், பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எலகங்கா அருகே பாலாஜிநகரில் உள்ள ஒரு வீட்டிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு நைஜீரியாவை சேர்ந்த ஒரு வாலிபர் வசித்து வந்தார். அவரது வீட்டிலும் போதைப்பொருட்கள், கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.

  அவரிடம் இருந்து 330 கிராம் கொகைன், 178 எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட பல்வேறு விதமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அந்த வாலிபர் சுற்றுலா சம்பந்தப்பட்ட விசாவில் இந்தியாவுக்கு வந்து, பெங்களூருவில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக ராமமூர்த்திநகர் மற்றும் பாகலூர் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து கைதான 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story