இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்
x
தினத்தந்தி 27 July 2021 9:12 PM GMT (Updated: 27 July 2021 9:12 PM GMT)

பெங்களூருவில் வரதட்சணை கொடுக்காததால் இளம்பெண்ணுக்கு, மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

வரதட்சணை கேட்டு கொடுமை

  பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 31). இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு ஹரீஷ் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

  குறிப்பாக பெற்றோர் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி ஹரீஷ், அவரது தந்தை ராமகிருஷ்ணா(61) ஆகிய 2 பேரும் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வரதட்சணை வாங்கி வருவதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதன் காரணமாக தனது மனைவியை ஹரீஷ் அடித்து, உதைத்து தாக்கியதாகவும் தெரிகிறது.

மாமனார் பாலியல் தொல்லை

  அதே நேரத்தில் ஹரீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் வரதட்சணை வாங்கி வரும்படி இளம்பெண்ணுக்கு, ராமகிருஷ்ணா தொந்தரவு கொடுத்ததுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியே சொல்ல கூடாது என்றும் மருமகளை அவர் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து அவர் வாழ்ந்து வந்தார். ஆனாலும் கணவர் மற்றும் மாமனாரின் தொல்லை அதிகரித்ததால், நடந்த சம்பவங்கள் குறித்து பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார்.

  அதில், ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் ஹரீஷ், மாமனார் ராமகிருஷ்ணா தொல்லை கொடுப்பதாகவும், கணவர் வீட்டில் இல்லாத போது மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டுவதாகவும் இளம்பெண் கூறி இருந்தார். அதன்பேரில் ஹரீஷ், அவரது தந்தை ராமகிருஷ்ணா மீது பசவனகுடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story