வாலிபர் குத்திக்கொலை


வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 27 July 2021 9:21 PM GMT (Updated: 27 July 2021 9:21 PM GMT)

கலபுரகி டவுனில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கலபுரகி:

கத்திக்குத்து

  கலபுரகி டவுன் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அனில் பஜாந்திரி(வயது 24). டிரைவரான அவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரக்கு ஆட்டோவை விற்ற அனில், அதன்பின்னர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு அனில் தூங்க சென்றார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

  இதனால் செல்போனை எடுத்து பேசியபடி அனில் வெளியே சென்றார். கலபுரகி கோர்ட்டு சாலையில் சென்று கொண்டு இருந்த அனிலை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அனிலை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அனில் சாலையில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்.

சாவு

  இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிய அனிலை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அனில் இறந்து விட்டார்.

  இதுகுறித்து அறிந்த ஸ்டேஷன் பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். பின்னர் அனிலின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அனிலை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை.

கால் வெட்டு

  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கலபுரகி புறநகரில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கும், அனிலின் நண்பர் விஜய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரின் காலை, விஜய் வெட்டியதாக தெரிகிறது. இதற்கு அனில் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் அந்த வாலிபரின் நண்பர்கள் அனிலை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story