3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 4:31 PM GMT (Updated: 28 July 2021 4:31 PM GMT)

3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

மத்திய அரசுக்கு எதிராக நேற்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி வரை, சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தேசம் தழுவிய பிரசார இயக்கம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 9-ந் தேதி, வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில், கார்ப்பரேட் கொள்ளையர்களே வெளியேறு என வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிரசார இயக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்க கூடாது. விவசாயத்தை அழிக்கும் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை நாள்தோறும் உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களை வதைக்கக்கூடாது.

100 நாள் வேலைக்கான நிதியை குறைக்கக் கூடாது. கூலியை ரூ.400 ஆகவும் அதிகரித்து வழங்க வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ், ரெயில்வே, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் அபிமன்னன், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆழ்வார், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், அன்பு, பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story