திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த 3 வாலிபர்கள் சிக்கினர்


திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த 3 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 28 July 2021 6:29 PM GMT (Updated: 28 July 2021 6:29 PM GMT)

திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த 3 வாலிபர்கள் சிக்கினர். அவர்களை, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உறவினர்களே சுற்றி வளைத்து பிடித்தனர்.

திருவண்ணாமலை

காதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழக்கடை நடத்தி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயது சிறுமியை காதலித்தார். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய அவர் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் 2 பேருடன் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்தி கொண்டு அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சுற்றி வளைத்தனர்

இதைத்தொடர்ந்து சிறுமியை தேடிய அவரது பெற்றோர், மகள் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் ெபற்றோர் உறவினர்களுடன் காரில் திருவண்ணாமலைக்கு வந்தனர். பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களை அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர் மரக்காணம் அருகில் உள்ள பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்த பிரம்மதேசம் போலீசாரிடம் சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களை திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக அவர்களை பிரம்மதேசம் போலீசார் அழைத்துச் சென்றனர்.

Next Story