தேர்தங்கல் சரணாலயத்தில் தங்கிய கூழைக்கிடா


தேர்தங்கல் சரணாலயத்தில் தங்கிய கூழைக்கிடா
x
தினத்தந்தி 28 July 2021 7:10 PM GMT (Updated: 28 July 2021 7:10 PM GMT)

சீசன் முடிந்தும் ராமநாதபுரம் தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கிடா பறவைகள் தங்கி வருகின்றன.

ராமநாதபுரம், 
சீசன் முடிந்தும் ராமநாதபுரம் தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கிடா பறவைகள் தங்கி வருகின்றன. 
சரணாலயம்
ராமநாதபுரத்தில் இருந்து ‌நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ளது தேர்தங்கல் பறவைகள் சரணாலயம். ஆண்டு தோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் பறவைகள் வரதொடங்கும்.இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் திரும்பி செல்வது வழக்கம். இந்த சரணாலயத்திற்கு மஞ்சள்மூக்குநாரை, சாம்பல் நிறநாரை, கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வருவது வழக்கம்.
 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏராளமான பறவைகள் தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்தன. வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும் இந்த பறவைகள் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரையிலும் சரணாலயத்தை விட்டு திரும்பிச் செல்லவில்லை. சரணாலயத்தின் நீர்நிலைகளை சுற்றி உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து அந்த குஞ்சுகளுக்கும் பறக்க கற்று கொடுக்கும் பயிற்சியிலும் பறவைகள் ஈடுபட்டிருந்தன.
விசாரணை
தற்போது பெரும்பாலான பறவைகள் சரணாலயத்தை விட்டு இடம் பெயர்ந்து சென்று விட்டநிலையில் கூழைக்கிடா பறவைகள் இன்னும் சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகளில் நீந்தியபடி மீன்களை கவ்விப் பிடித்து அங்குள்ள மரங்களில் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.  நேற்று சிறகுகள் வெட்டப்பட்டு கூழைக்கிடா பறவை ஒன்று செத்து கிடந்தது. 
இதுபற்றி தகவல் அறிந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சரணாலயத்தின் நீர்நிலை அருகே உள்ள கரை பகுதியில் செத்து கிடந்த கூழைக்கிடா பறவையை பார்வையிட்டதுடன் காரணம் பற்றி பரிசோதனை செய்து விசாரணை வருகின்றனர். 
பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கிடா பறவைகளோடு ஏராளமான உள்ளான் பறவைகள் மற்றும் தாழைகோழிகளும் நீரில் வசித்து வருகின்றன.

Next Story