கருகும் நெல் நாற்றுகளை காப்பாற்ற குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றும் விவசாயிகள்


கருகும் நெல் நாற்றுகளை காப்பாற்ற குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றும் விவசாயிகள்
x
தினத்தந்தி 28 July 2021 8:11 PM GMT (Updated: 28 July 2021 8:11 PM GMT)

தஞ்சை அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நாற்றுகள் கருகி வருகிறது. அதனை காப்பாற்ற விவசாயிகள் குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி வருகிறார்கள். குறுவைக்கு பயிர் காப்பீடும் இல்லாததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.

தஞ்சாவூர்:
தஞ்சை அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நாற்றுகள் கருகி வருகிறது. அதனை காப்பாற்ற விவசாயிகள் குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி வருகிறார்கள். குறுவைக்கு பயிர் காப்பீடும் இல்லாததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாக வேளாண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கல்லணையின் தலைமடை பகுதியில் குடமுருட்டி ஆற்றின் பாசன வாய்க்காலான திருத்துக்கால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 800 ஏக்கர் பாசன வசதி பெறும்.
நாற்றுகள் கருகும் நிலை
இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் நடவு செய்வதற்காக நாற்றுகளும் 30 நாட்களை கடந்த நிலையில் உள்ளது. ஆனால் வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையுடன் காணப்படுகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கண்டியூர் அடுத்த திருப்பந்துருத்தி பகுதியில் சுமார் 10 ஏக்கரில் நாற்று விடப்பட்டு 35 நாட்கள் ஆகியும் வாய்க்காலில் தண்ணீர் வராததால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இதனால் நாற்றுகள் கருகி வருகிறது. நாற்றுகளை காப்பாற்ற வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை குடம், வாளி மூலம் இறைத்து ஊற்றி வருகிறார்கள்.
வயல்களிலும் வெடிப்பு
இதே போல் அந்த பகுதியில் நடவு செய்த வயல்களுக்கும் தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு விழுந்து பயிர்கள் கருகி வருகின்றன. கருகும் பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இது குறித்து திருப்பூந்துருத்தியை சேர்ந்த விவசாயி சுகுமாறன் கூறுகையில், கல்லணையிலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் இப்பகுதியில் உள்ள கண்டியூர் வாய்க்கால், திருத்துக்கால் வாய்க்கால், திருப்பூந்துருத்தி வாய்க்கால், திருவலம்பொழில் வாய்க்கால் ஆகிய 4 வாய்க்கால்களிலும் முறையாக தண்ணீர் வரவில்லை. குடமுருட்டி ஆற்றில் 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் எடுத்தால் தான் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் வந்து பாசனம் பெறும். ஆனால் தற்போது 700 கன அடி தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படுகிறது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த 4 வாய்க்கால்களும் ஆற்றில் இருந்து தலா 3 கி.மீ. தூரம் வரை சென்று பாசன வசதி அளிக்கும்.
காப்பீடும் இல்லை
35 நாட்களை கடந்து விட்டால் நாற்றுகளை பறித்து நடுவதும் சாத்தியம் இல்லை. இருப்பினும் எப்படியாவது நடவு செய்து விடலாம் என்ற எண்ணத்தில் வயல்களில் தேங்கிக்கிடக்கும் மழைநீரை வாளி மற்றும் குடம் மூலம் எடுத்துச்சென்று நாற்றுகளுக்கு ஊற்றுகிறார்கள். ஆறு நிறைய தண்ணீர் சென்றும், எங்களுக்கு இதுவரை தண்ணீர் இல்லை. குறுவைக்கு இந்த ஆண்டு பயிர் காப்பீடும் இல்லை. தற்போது தண்ணீரும் இல்லை. என்றனர்.

Next Story