கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக மாணவருக்கு 10 ஆண்டு சிறை


கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக மாணவருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 29 July 2021 4:50 PM GMT (Updated: 29 July 2021 4:50 PM GMT)

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக மாணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர், 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அருண்குமார் (வயது 24). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படித்து வருகிறார். இவருக்கும் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் பஸ்சில் சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டது.  இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து பெண்ணின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் அருண்குமார், அங்கு சென்று இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண், அருண்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

பலாத்காரம்

அதற்கு அருண்குமார், பிளஸ்-2 வரை படித்துள்ள நீ, கல்லூரி படிப்பை முடித்தால் தான் எனது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்றார். இதையடுத்து அந்த பெண், கடந்த 2018-ம் ஆண்டு சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் 16.1.2019 அன்று அந்த மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அங்கு அருண்குமார் சென்றார். பின்னர் அவர், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மீண்டும் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே வெளியில் சென்றிருந்த மாணவியின் தாய் மற்றும் சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் மாணவியுடன், அருண்குமார் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருமணத்திற்கு மறுப்பு

உடனே அவர்கள், அருண்குமாரை பிடித்து வைத்துக்கொண்டு, இதுபற்றி அவரது பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறினர். அதற்கு அருண்குமார், தனது சகோதரிக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு மாணவியை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார். இதை நம்பிய மாணவியின் தாய் மற்றும் சகோதரி அருண்குமாரை அங்கிருந்து அனுப்பி விட்டனர். பின்னர் மறுநாள் அந்த மாணவி, அருண்குமாரிடம் சென்று திருமணம் செய்து கொள்வது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து, மாணவியை ஆபாசமாக திட்டினார். இதில் மனவேதனையடைந்த மாணவி, விஷத்தை குடித்து விட்டார்.  இதையடுத்து  அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அருண்குமாரின் சகோதரி திருமணம் முடிந்ததும், 25.2.2019 அன்று மாணவி தனது தாயுடன் அருண்குமார் வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, மாணவியை ஆபாசமாக திட்டினார்.  இதுகுறித்து மாணவி, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

10 ஆண்டு சிறை

அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அபராத தொகையில் இருந்து ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story