மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x
தினத்தந்தி 29 July 2021 6:57 PM GMT (Updated: 29 July 2021 6:57 PM GMT)

கரூரில் குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
குடும்ப தகராறு
கரூர் காந்திகிராமம் தெற்கு இந்திராநகர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பழைய துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சின்னபொண்ணு (41). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால்  கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  
மனைவி கொலை
இந்தநிலையில் நேற்று இரவும் சுப்பிரமணி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே வீட்டின் முன்பு வைத்து வாக்குவாதம் உண்டாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டின் முன்பு கிடந்த கருங்கல்லை எடுத்து சின்னபொண்ணுவின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். 
கணவர் தற்கொலை
இதனால் பதற்றம் அடைந்த சுப்பிரமணி தனது மொபட்டை எடுத்துக் கொண்டு, வீட்டின் அருகே உள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரெயில் முன் சுப்பிரமணி பாய்ந்தார். இதில் உடல் சிதறி நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 
போலீசார் விசாரணை
பின்னர் சின்னபொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சின்னபொண்ணு கொலை செய்யப்பட்டது குறித்து தாந்தோணிமலை போலீசாரும், சுப்பிரமணி தற்கொலை குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story