கோர்ட்டுகளில் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: சேலம் மாவட்டத்தில் 19,600 பேர் எழுதுகிறார்கள்


கோர்ட்டுகளில் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: சேலம் மாவட்டத்தில் 19,600 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 29 July 2021 8:38 PM GMT (Updated: 29 July 2021 8:38 PM GMT)

கோர்ட்டுகளில் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை சேலம் மாவட்டத்தில் 19,600 பேர் எழுதுகிறார்கள்.

சேலம்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜூடிசியல் ரெக்ருட்மெண்ட் செல் நடத்தும் கோர்ட்டுகளில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை மொத்தம் 19 ஆயிரத்து 600 பேர் எழுத உள்ளனர்.
இந்த நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் கலெக்டர் கார்மேகம், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, குடும்ப நல நீதிபதி பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தின் இணை பதிவாளர் டி.என்.டி.ராவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதாவது, தேர்வு மையங்களில் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். இந்த தேர்வினை எழுத வரும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கேட்டு எழுதுபவர் தேர்வு எழுத உதவி செய்யும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Next Story