1,859 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருகிறது


1,859 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருகிறது
x
தினத்தந்தி 30 July 2021 3:18 AM GMT (Updated: 30 July 2021 3:18 AM GMT)

தமிழகத்தில் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. அந்தவகையில் சென்னை, கோவை, ஈரோடு உள்பட 20 மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,053 ஆண்கள், 806 பெண் கள் என மொத்தம் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 188 பேரும், சென்னையில் 181 பேரும், ஈரோட்டில் 166 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும், சேலத்தில் 95 பேரும், பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒருவருக்கும், 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 250 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை3 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 142 ஆண்களும், 10 லட்சத்து 62 ஆயிரத்து 484 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 93 ஆயிரத்து 477 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 68 ஆயிரத்து 238 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 7 பேரும் என 28 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கோவை, திருப்பூர், சேலத்தில் தலா 3 பேரும், திருச்சி, தூத்துக்குடி, கடலூரில் தலா 2 பேரும் உள்பட நேற்று மட்டும் 19 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 19 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

உயிரிழந்தவர்களில் 7 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 23 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,145 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 2,145 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 434 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 21 ஆயிரத்து 207 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story