வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 31 July 2021 1:08 PM GMT (Updated: 31 July 2021 1:08 PM GMT)

திருவண்ணாமலை நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. 

கொரோனா  தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் தொடங்குவதற்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் மூலம் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீத செலுத்தி கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கென தனி கவனம் செலுத்தப்பட்டு நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒலி பெருக்கிகள் மூலமும், ஆட்டோ பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் பல்வேறு காரணங்களை கூறி தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். 

வீடு, வீடாக...

இதனால் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி  நகராட்சி பகுதிகளில் உள்ள 39 வார்டுகளிலும் டாக்டர், செவிலியர் கொண்ட மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இக்குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ளவர்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டறிந்து அவர்களுக்கு அங்கேயே ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகிய பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 

அப்போது சிலர் உடல்நலம் சரியில்லை, சர்க்கரை உள்ளது, உப்பு உள்ளது என தடுப்பூசி செலுத்த மறுக்கின்றனர். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.


Next Story