பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை


பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
x
தினத்தந்தி 5 Aug 2021 6:43 PM GMT (Updated: 5 Aug 2021 7:04 PM GMT)

பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளபள்ளியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் என்ற முருகன் (வயது 40). இவரது மனைவி லின்சி (36). இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த 21-11-2017-ம் ஆண்டு வெளியூர் செல்வதற்காக லின்சி பந்தலூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த யோகேஸ்வரன் அரிவாளால் லின்சியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் யோகேஸ்வரன் கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கூடலூர் உதவி சார்பு நீதிபதி வெங்கடசுப்பிரமணியன் குற்றம் சாட்டப்பட்ட யோகேஸ்வரனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story