திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை உறவினர்கள் திடீர் சாலை மறியல்


திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை உறவினர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Aug 2021 5:13 PM GMT (Updated: 7 Aug 2021 5:13 PM GMT)

மத்தூர் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர்:
 திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள புளியாண்டப்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25). வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த அனிதா (23) என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அனிதா போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அனிதாவும், ஹரிஹரனும் பெற்றோருடன் வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்த அனிதா திடீரென காணவில்லை. இதுகுறித்து அவருடைய தந்தை அண்ணாச்சி மத்தூர் போலீஸ் நிலையத்தில்  புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதாவை தேடி வந்தனர். 
கிணற்றில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலை அனிதா அதே பகுதியை சேர்ந்த செவத்தான் என்பவரது கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஹரிஹரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அனிதாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும்  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அனிதாவின் உறவினர்கள் மத்தூர்-திருப்பத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அனிதா சாவு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
அப்போது அனிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story