தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை -சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை -சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2021 5:49 AM GMT (Updated: 9 Aug 2021 5:55 AM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல்; 2011ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சேலம்

சேலம் கொங்கணாபுரம் தூய்மை பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரணப் பொருட்கள் வழங்கினார் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிஒ அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; ராஜேந்திர பாலாஜியிடம் பேசினேன். அவர் அ.தி.மு.க.வில் தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார்.

பெகாசஸ் விவகாரத்தில் உண்மை நிலை குறித்து தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடன்கள் தற்போது மூலதனங்களாக உள்ளது. 

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை; சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டுகிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தற்போது தொடங்கி வைக்கிறார்கள்.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்; அ.தி.மு.க.ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து. 2011ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது. 

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. கூறியது நீட் தேர்வை ரத்து செய்ய இதுவரை என்ன தீர்வு காணப்பட்டுள்ளது.

கடன் சுமை அதிகரித்த போதும் அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை."திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?; நீட் தேர்வை ஏன் இதுவரை ரத்து செய்யவில்லை.

திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தான் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்கிற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 

டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்கிற தி.மு.க.வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.

Next Story