கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1855 டன் யூரியா இருப்பு உள்ளது ஆதார் எண்ணை பதிவு செய்யாமல் உரம் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து உரிமையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1855 டன் யூரியா இருப்பு உள்ளது ஆதார் எண்ணை பதிவு செய்யாமல் உரம் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து  உரிமையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2021 4:47 PM GMT (Updated: 9 Aug 2021 4:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1855 டன் யூரியா இருப்பு உள்ளதாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யாமல் உரம் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சின்னசேலம்

யூரியா தட்டுப்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யூரியா உரம் தடுப்பாடு இருப்பதாகவும், ஒரு சில கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவித்த விவசாயிகள் உரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில்  வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தரம் தலைமையில் உதவி இயக்குனர் (உரக் கட்டுப்பாடு) அன்பழகன், சின்னசேலம் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, வேளாண்மை அலுவலர் அனுராதா ஆகியோர் சின்னசேலம் பகுதியில் உள்ள உரக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளின் ஆதார் அட்டையை விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்து உரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு தெரியும் வகையில் உரம் இருப்பு மற்றும் விலை விவரங்களை பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினர். 

உரிமம் ரத்து செய்யப்படும்

பின்னர் இணை இயக்குனர் சுந்தரம் கூறும்போது, தற்போது மாவட்டத்தில் தனியார் விற்பனை கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 1,855 டன் யூரியா இருப்பு உள்ளது. இதை விவசாயிகள் பெற்று பயன் பெற வேண்டும். விற்பனை முனைய எந்திரத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யாமல் உரம் வழங்கினால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடையின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் விவசாயிகள் அதிக அளவில் யூரியா பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள தழைச்சத்து, தொழு உரத்தை பயன்படுத்தி மண்வளத்தை கூட்டி பயிரிட வேண்டும். தழைச்சத்துக்கு நிகரான காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.


Next Story