சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3½ கோடி சுழல்நிதி கடன்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்


சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3½ கோடி சுழல்நிதி கடன்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:41 PM GMT (Updated: 9 Aug 2021 8:41 PM GMT)

தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3½ கோடியில் சுழல்நிதி கடன்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வழங்கினார்.

திருப்பத்தூர்,

தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3½ கோடியில் சுழல்நிதி கடன்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வழங்கினார்.

சுழல்நிதி கடன்

தமிழக ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி திட்ட கடன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
 மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் முதன் முதலில் மகளிர் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் சமூக நலத்துறையுடன் இணைந்திருந்த மகளிர் குழுக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து தனி அலுவலர் நியமித்து இத்திட்டம் செயல்பட தொடங்கியது.
இத்திட்டத்தின் நோக்கம் பெண்கள் சுயமாக பொருளாதாரத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்பதேயாகும். அந்தவகையில் கிராமப்புற பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு குழுக்களாக அமைத்து அந்த குழுவின் மூலம் அந்தந்த பகுதியில் நிலையான வருமானம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
 இந்த நிகழ்ச்சியில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 190 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.1 கோடி சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலையும், 226 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் நலிவுற்றோர் வறுமை குறைப்பு நிதிக்கான காசோலையும், 29 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.3 கோடி வங்கிகள் மூலம் கடன் திட்ட உதவிகள் உள்ளிட்ட 445 குழுக்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வானதி, மகளிர் திட்ட உதவி அலுவலர் விஷ்ணுதரன், தாசில்தார் ஜெயந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story