பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்தன


பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்தன
x
தினத்தந்தி 10 Aug 2021 5:50 PM GMT (Updated: 10 Aug 2021 5:50 PM GMT)

ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீரங்கம், கள்ளழகர் கோவில்களில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீரங்கம், கள்ளழகர் கோவில்களில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. 
ஆடிப்பூர திருவிழா 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் தேரோட்டம் நடைபெறும்.
அதேபோல இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் கோவில் உள்பிரகாரத்தில் ஆண்டாள்- ெரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வருகின்றனர். 
தங்கத்தேரோட்டம் 
ஆடிப்பூர தினமான இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையால், கோவில் வளாகத்திற்கு உள்ளேயே தங்கத்தேரில் ஆண்டாள், ெரங்கமன்னார் எழுந்தருளி தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. 
இதையொட்டி நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், மங்கலப்பொருட்களை கொண்டுவந்தனர். அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்,
அதேபோல் மாலை 6 மணிக்கு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவுக்கான பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப்பொருட்களை கொண்டு வந்தனர். அதையும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு ஆண்டாளுக்கு அணிவித்தனர்.

Next Story